திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் கொச்சியில் புராதன பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி மையம் நடத்தி வந்தார். தன்னிடம் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறி பிரபலமானார். இவர் மாநில டிஜிபி, அரசியல் தலைவர்கள், மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். புராதன பொருட்களை விற்ற வகையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தனது கணக்கில் ரூ.2.52 லட்சம் கோடி வந்து இருக்கிறது. அதை எடுக்க அரசுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரின் அதிரடி சோதனையில் மோன்சனிடம் உள்ள பொருட்கள் கேரளாவிலேயே தயார் செய்து பழங்கால பொருட்கள் போன்று விற்று வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் பெயரிலும் ரூ.50 மோசடி செய்ய முயன்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கொச்சி மாட்டான் சேரியில் புராதன பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள சலாம் என்பவர் கூறியதாவது:
நான் மாட்டான்சேரியில் புராதன பொருள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன். மோன்சன் என்னிடம் வந்து ரூ.50 கோடிக்கு கடையை வாங்கி கொள்வதாக கூறினார். தான் தமிழ் நடிகரின் பினாமி. கடையை பார்க்க நடிகர் வருவார் என்றதை நம்பி விட்டேன். அவர் கடை வாங்குவார் என கருதிய நிலையில் அவரும், நடிகரும் வரவே இல்லை. இதன் மூலம் எனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.