×

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை

புதுடெல்லி: மகாத்மா காந்தி, சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 152வது பிறந்தநாளும், நாட்டின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 117வது பிறந்தநாளும் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில்ல `தேச தந்தையின் பிறந்தநாளில் தலை வணங்குகிறேன். அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள், ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவருடைய கொள்கைகள் உலகளவில் பல லட்ச மக்களுக்கு வலிமை கொடுக்கிறது,’ என்று கூறியுள்ளார்.

சாஸ்திரியின் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘கொள்கைகள் அடிப்படையிலான சாஸ்திரியின் வாழ்க்கை, அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக திகழ்கிறது,’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, விஜய்காட்டில் உள்ள சாஸ்திரியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவர்களின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


காதி துணியில் உருவான 1000 கிலோ தேசியக்கொடி
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எம்ரோன் முசாவி கூறுகையில், ``லடாக்கில் லே பகுதியை பார்த்த வண்ணம் உள்ள உயர்ந்த மலையில் நாட்டின் மிக பெரியதும், 1,000 கிலோ எடையில், கைத்தறி துணியிலான தேசியக்கொடி மகாத்மா காந்தியின் பிறந்தநாள், 75வது சுதந்திர தினம் நினைவாக ஏற்றப்பட்டது,’’ என்று தெரிவித்தார்.



Tags : Mahatma Gandhi ,Lal Bahadur Shastri , Mahatma Gandhi, Lal Bahadur Shastri, Birthday, Prime Minister
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி...