சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 15 வரையிலான மண்டலங்களில் தூய்மை பணிகள் உர்பேசர் சுமித் எனும் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், லாயிட்ஸ் காலனியில் உர்பேசர் சுமித் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் உர்பேசர் சுமித் நிறுவனத்தின் சார்பில் 9 முதல் 15 வரையிலான மண்டலங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சென்று குப்பைகளை சேகரிக்க ஏதுவாக சிறிய வகையிலான மூன்று சக்கர மிதிவண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் உர்பேசர் சுமித் நிறுவனத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மழைக்காலங்களில் பணியில் ஈடுபட ஏதுவாக மழைக்கால அங்கிகளை வழங்கினார். இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் வகையில் பயிற்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை கையாள்வதற்கு ஏதுவாக உதிரிபாக கிடங்கு இந்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உர்பேசர் சுமித் நிறுவன தலைவர் சதக் ஜலால், துணை தலைவர் ரால் மார்டினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.