சென்னை: நெல்கொள்முதலில் ஆன்லைன் பதிவு நடைமுறையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். ஏற்கனவே நேரடி கொள்முதல் நிலையங்களைப் போதுமான அளவிற்கு திறக்காததால், விவசாயிகள் கடும் இன்னலுக்கும், இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன. இதையெல்லாம் சரிசெய்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.