×

அம்பத்தூர் ஏலச்சீட்டில் முதலீட்டாளர்களுக்கு பணம் பெற்று தர ஆணையராக ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் நியமனம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அம்பத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி மோசடி நடந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்பத்தூர் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கத்தின் நிர்வாகிகள் காசிராஜன், காஞ்சிராஜன் பாஸ்கரன், செல்வராஜ் உள்ளிட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஏலச்சீட்டு தொகையை முறையாக திருப்பி கொடுக்காமல் இவர்கள் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பணத்தை கொடுத்து திரும்ப கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதில் 52 பேரிடம் சுமார் 3 கோடியே 50 லட்சம் மோசடி நடந்ததாக கூறப்பட்டது. புகாரின் பேரில் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசிராஜன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இவர்கள் தொடர்புடைய காஞ்சிராஜன், செல்வராஜ், செல்வம், பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஏலச்சீட்டு பணத்தை முழுவதுமாக முதலீடு செய்தவர்களுக்கு திருப்பித் தருவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க மனுதாரர்கள் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் ஆணையராக நியமிக்கப்படுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். பணம் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களை வருகிற டிசம்பர் 1ம் தேதிக்குள் நீதிபதி ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.

உரிய ஆதாரங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான முதலீட்டு தொகையை ஆணையர் திரும்ப வழங்க வேண்டும். இந்த வழக்கில் காஞ்சிராஜன் உள்ளிட்டோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இவர்கள் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Judge Kirubakaran ,Ambattur ,Chennai , Ambattur, Lottery, Judge, Kirubakaran, Chennai high Court
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...