சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, வைகோ, திருமாவளவன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ மற்றும் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.