சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோரூரில் பல கட்சிகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்க ஏன் அனுமதிக்கவில்லை என்று அந்த கிராம மக்கள் ஆத்திரப்பட்டு கொடியை ஏற்றியே தீருவோம் என கொடி கம்பத்தை எடுத்து சென்றபோது ஒருபுறம் சாதியவாத சக்திகளும், காவல்துறையும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டன. இதை கண்டித்து சென்னையிலும், சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. திட்டமிட்டபடி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து முதல்வர் பேச விரும்பினார். அதன் அடிப்படையில், சேலத்திலும், மதுரையிலும் நடத்துவதாக இருந்த போராட்டத்தை தள்ளிவைத்தோம். அதை தொடர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து இந்த விவரங்களை எடுத்துக்கூறினோம். மிகுந்த கவனத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். அதுகுறித்து பரிசீலிப்பதாகவும் கூறியிருக்கிறார். சாதியவாத, மதவாத சக்திகள் பிரச்னையை திசை திருப்புகிறார்கள். இதுகுறித்து முதல்வரிடம் விளக்கி பேசியிருக்கிறோம். சேலத்திலும், மதுரையிலும் இனி போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.