கரூர் : கரூர் எஸ்பி அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது.கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில், ஏடிஎஸ்பிக்கள் கண்ணன், கீதாஞ்சலி உள்பட அனைத்துதுறை போலீசாரும் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 பேர் தங்கள் கோரிக்கை, எதிர்பார்ப்பு, தேவைகள் குறித்து மாவட்ட எஸ்பியிடம் மனுவாக அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். டிரான்ஸ்பர், காவலர் குடியிருப்பு வளாகத்தில் வீடு, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, பணப்பலன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக காவலர்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி, இது குறித்து உடனுக்குடன் விசாரணை செய்து, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுவதோடு, மற்ற மனுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.
வாரந்தோறும் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, நேற்று சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவும், காவலர்கள் அளித்த கோரிக்கை குறித்து பரீசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி தெரிவித்துள்ளார்.