தஞ்சை : தஞ்சையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றிய 11 வாகனங்களுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக நீளமுள்ள கம்பிகள் ஏற்றி செல்லப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி செல்லப்படுவதாகவும் அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தஞ்சை பள்ளிஅக்ரகாரம் ரவுண்டானா மற்றும் திருவையாறு பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் அதிக பாரம் ஏற்றி வந்த 11 வாகனங்களுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நீளமான கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற 2 மினி லோடு வண்டிகளை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.