கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு பயனடையும், மோர்தானா இடது புற கால்வாயில் நேற்று நீர் வரத்து தொடங்கியதால் சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது மோர்தானா அணை. ஆந்திர - தமிழக எல்லையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மோர்தானா அணை நிரம்பியது. அணையில் இருந்து நிரம்பி வழியும் உபரி நீரானது குடியாத்தம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மோர்தானா வலது புற கால்வாய் வழியாகவும், கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு இடது புற கால்வாய் வழியாகவும் செல்லும்.
இந்த இரண்டு கால்வாய்களால் சுமார் 8ஆயிரம் ஏக்கருக்கும், 19 ஏரிகளுக்கும் நீர் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், நேற்று மாலை மோர்தானா அணையின் இடது புற கால்வாயில் நீர் வரத்து தொடங்கியது. சேத்துவண்டை, கீழ் ஆலத்தூர், நாகல், கெம்மங்குப்பம், தேவரிஷிகுப்பம், கல்யாண பெரியாங்குப்பம், காங்குப்பம் ஆகிய கிராமங்கள் வரை உள்ள இந்த இடது புறக்கால்வாயில் நேற்று இரவு வரை நீர் வரத்து தொடங்கியது.
தொடர்ந்து, பெருமாங்குப்பம், மேல்மாயில், ஆலங்கனேரி, கீழ்முட்டுக்கூர், சென்றாம்பள்ளி, காளம்பட்டு, செஞ்சி வழியாக ராஜா தோப்பு அணைக்கு இன்று நீர்வரத்து செல்லக்கூடும். இதனால் செஞ்சியில் உள்ள ராஜா தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கே வி குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.