டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தின் பராவுக் கிராமத்தில் பிறந்தார். 1991ம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், 1994ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.பின்னர், 2015ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி பீகார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் அப்போதைய குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2017ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி இந்திய குடியரசு தலைவராக பதவியேற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார் வாழ்த்துச் செய்தியில், “குடியரசுத் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது பணிவான பண்பு காரணமாக, அவர் தன்னை முழுமையாக நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். சமூகத்தில் உள்ள ஏழை மக்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவர் செய்துள்ள பங்கு ஈடு இனையற்றது. அவர் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழட்டும்.”, என்று கூறியுள்ளார்.
அதே போல், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில்
வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும், என்று தெரிவித்துள்ளார்.