வான்டா: சுதிர்மன் கோப்பை பேட்மின்டன் போட்டியில் பின்லாந்துக்கு எதிரான 5ஆட்டங்களில் 4-1 என்ற கணக்கில் வென்றாலும் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது. பின்லாந்தின் வான்டா நகரில் சுதிர்மன் கோப்பை பேட்மின்டன் போட்டி நடக்கிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று பின்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் எம்.ஆர்.அர்ஜுன், அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 21-14 என நேர் செட்களில் அண்டன் கெய்ஸ்டி, ஜென்னி நிஸ்டோர்ம் இணையை தோற்கடித்தது.
அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-12, 21-14, 21-11 என்ற செட்களில் காலே கோலஜோனையும், மகளிர் ஒற்றையர் பிரிவில் மாளவிகா பன்சூட் 21-16, 21-11 என நேர் செட்களிலும் நெல்லா நிகியூவிஸ்டையும் வீழ்த்தினர். மகளிர் இரட்டையர்பிவில் தனிஷா கிராஸ்டோ, ரூத்பர்னா பண்டா இணை 21-12, 21-13 என நேர் செட்களில் மெடில்டா லிண்ட்ஹோம், ஜென்னி நிஸ்டோர்ம் இணையை வீழ்த்தியது. அதே நேரத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் எம்.ஆர்.அர்ஜுன்,துருவ் கபிலா இணை 20-22, 19-21 என்ற நேர் செட்களில் அன்டன் கெய்ஸ்டி, ஜெஸ்பர் பால் ஆகியோரிடம் போராடி தோற்றனர்.
முடிவில் இந்தியா 4-1 என்ற புள்ளி கணக்கில் பின்லாந்தை வென்றது. ஏற்கனவே நடந்த ஏ பிரிவு லீக் சுற்றுகளில் சீனாவிடம் 0-5, தாய்லாந்திடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் தோற்ற இந்தியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.