×

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆறுமுகசாமி ஆணையம் புதிய குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனைதான் முட்டுக்கட்டையாக உள்ளது,’ என உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும், அவர் மட்டும் தற்போது வரையில் ஆஜராகவில்லை. அதே நேரம், இந்த ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘மனுவில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி அப்துல்நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘‘இந்த வழக்கின் வாதம் இன்றே (நேற்று) முடிந்து விடுவதற்கான சாத்தியம் கிடையாது. ஏனெனில், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சில நாட்கள் அவகாசம் தேவைப்படும். அதனால், வழக்கை தசரா விடுமுறை வரை ஒத்திவைக்க வேண்டும்,’’ என்றார்.   அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘இந்த வழக்கில் புதியதாக வாதங்களை முன்வைக்க ஒன்றும் கிடையாது.

ஏனெனில், ஏற்கனவே அனைத்து வாதங்களும் முடிந்து விட்டது. மேலும், ஆணையத்தின் விசாரணையும் ஒரு மாதத்தில் முடியும் நிலையில் உள்ளது. எனவே, வழக்கை இன்றே விசாரித்து முடிக்கலாம். மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே  பிறப்பித்துள்ள இடைக்கால தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வேண்டும் என்றே மருத்துவமனை தரப்புதான் தாமதப்படுத்தப்படுகிறது,’ என குற்றம்சாட்டினார். இதையடுத்து, அக்டோபர் 20ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Arumugasami Commission ,Jayalalithaa , Jayalalithaa, death, trial, Arumugasami
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...