×

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்த தேர்தல் ஆணையம் : எந்தெந்த தேதிகளில் தெரியுமா ?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 9.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 காலை 10 மணி முதல் 6.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 காலை 10 மணி முதல் 9.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய சட்ட மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Electoral Commission ,Rural Inland Elections , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
× RELATED தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும்...