×

தூத்துக்குடியில் 8 மாத குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை: 6 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தாய் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் - ஜெபமலர் தம்பதிக்கு 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த ஜெபமலர் தனது குழந்தையுடன் தூத்துக்குடி சென்று விட்டார்.

சில தினங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை பார்க்க மணிகண்டன் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதுகுறித்து ஜெபமலரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் ஜெபமலர் தனது குழந்தையை விருதுநகரை சேர்ந்த தரகர் ஜேசுதாஸ், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோரின் உதவியுடன் ரூ.3 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை மீட்டு தரக்கோரி மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாய் ஜெபமலர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 5 பேரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags : Thoothukudi , Thoothukudi, child trafficking
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...