×

திருமானூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேறுடன் இடமாற்றம்

அரியலூர்: திருமானூர் அருகே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஆலமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. இப்பணியை செய்த சமூக ஆர்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் குறுகிய இடங்களை கண்டறியப்பட்டு தற்போது அப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகளில் உள்ள புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாறு வாய்க்காலின் வடகரையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலமரம் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்படும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மரத்தின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, மரத்தின் அடிப்பகுதியை வேருடன் அகற்றி, வேறு இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சேதுபதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒப்புதலுடன் இயந்திரங்கள் கொண்டு, ஆலமரம் அப்பகுதியில் இருந்து வேருடன் அகற்றப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு கொள்ளிட ஆற்று கரைப்பகுதியில் நடப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.

Tags : Thirumanaur , Relocated 100-year-old banyan tree near Thirumanaur
× RELATED திருமானூர்அருகே கூரை வீடு எரிந்து சேதம்