×

ஈக்வடார் சிறைச்சாலையில் கைதிகள் மோதலால் வெடித்து வன்முறை : பலியானோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு!!

குவைட்டோ: ஈக்வடார் சிறைச்சாலையில் 2 கைதிகள் தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் உள்ள குவாயகுய்ல் பிராந்தியத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கொலை, கொள்ளை உள்பட் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு குழுக்களாக உள்ளனர். அவ்வப்போது அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினமும் 2 கோஷ்டிகளை சேர்ந்த கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை வெடித்தது. கைதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கத்தியால் தாக்கி கொண்டனர். வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறைச்சாலை போர்களமாக காட்சியளித்தது. சிறை காவலர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் கலவர தடுப்புப் பிரிவு போலீசார் சிறை சாலைக்கு  வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின், கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 24 கைதிகள் பலியாகினர். படுகாயம் அடைந்த 120 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கைதிகள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இதையடுத்து ஈக்வடார்சிறை வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பெற்று வரும் மேலும் பல கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறை வளாகத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து துறைரீதியிலான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 


Tags : ஈக்வடார் ,சிறைச்சாலை,கைதிகள்
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...