காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய அமைப்புகள் தொடக்க விழா நடந்தது. மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை சார்ந்த இலக்கிய அமைப்புகளின் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அலுவலர் விஜயராஜ், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் ஆகியோர் இலக்கிய அமைப்புகளான தமிழ்த்துறையின் தளிர் தமிழ் மன்றம், ஆங்கிலத் துறையின் இலக்கிய அமைப்புகளை தொடங்கி வைத்தனர்.
இந்த 2 இலக்கிய அமைப்புகளும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கவிதை, கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகளில் பங்குபெற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும். மேலும் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து மேம்படுத்தும் வகையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை துறை சார்ந்த பேராசிரியர்கள் ரேகா, மணிகண்டன், பரிமளா, நாராயணசாமி, தீபிகா, பிருந்தா, வள்ளி ஆகியோர் செய்தனர். உதவி பேராசிரியை காயத்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.