புதுடெல்லி: ‘நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதிப்பு செய்தால் அதற்குரிய தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் கூட சட்டம் கொண்டு வந்து திரும்ப பெற இயலாது,’என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘சுராஜ் இந்தியா அறக்கட்டளை’யின் தலைவர் ராஜீவ் தயா என்பவர், கடந்த 2017ம் ஆண்டு தங்கள் நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறக்கோரி வழக்கு தொடர்ந்தார். மேலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு மீது 64 பொதுநலன் மனு தாக்கல் செய்து நீதித்துறையை தவறாக வழி நடத்தியதாக குற்றம்சாட்டி அவருக்கு ரூ.25 லட்சம் அபராதத்தை உச்ச நீதிமன்றம் விதித்தது.
ஆனால், இந்த தொகையை இதுவரையில் நீதிமன்றத்தில் அவர் செலுத்தவில்லை. இது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறக்கட்டளை தலைவர் ராஜீவ் தயா, ‘ரூ.25 லட்சம் அபராதம் செலுத்தும் அளவுக்கு என்னிடம் வசதியில்லை. ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துள்ளேன்,’என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘அறக்கட்டளையின் தலைவர் தயா, நீதிமன்றம், நிர்வாக ஊழியர்கள், மற்றும் மாநில அரசு உள்பட அனைத்து தரப்பினர் மீதும் சேற்றை வீசுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளால் கூட நீதிமன்றத்திடம் இருந்து பறிக்க முடியாது. உங்கள் செயலை ஏற்க முடியாது. இவ்வழக்கில் அக்டோபர் 7ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும்,’என்று உத்தரவிட்டனர்.