சென்னை: வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் விஜயகுமார் சில நாட்களுக்கு முன்பு புகாரளித்தார். அதில், தூத்துக்குடியை சேர்ந்த நாகராஜன் எனது சீனியர் வக்கீலுக்கு போன் செய்து, தன்னுடைய குழந்தை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்ற வருவதாகவும், மருத்துவ செலவுக்காக பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அப்போது அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர் உங்களிடம் கேட்க கூறியதன் பேரில் தான், உங்களிடம் போன் செய்து உதவி கேட்டதாக கூறியுள்ளார்.
மருத்துவமனையில் குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் மருத்துவ சீட்டு ஒன்றையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். அதை உண்மை என்று நம்பி ரூ.15 ஆயிரத்தை கூகுல்பே மூலம் அனுப்பியுள்ளார். பிறகு பணம் கேட்ட நபர் குறித்து விசாரித்தபோது இதுபோல் பலரிடம் ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பாரதி நகரை சேர்ந்த சிவக்குமார் (எ) ஜேக்கப்(41) என்பவரை கைது செய்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு தனது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் மருத்துவ சீட்டை வைத்து தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.