×

ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதா போலவே முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு!!

மதுரை : ரவுடிகளை அடக்கி ஒடுக்கி நடவடிக்கை எடுப்பதில் ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியுள்ளார்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதே போல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதை விரைவில் சீரமைக்க வேண்டும், மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கெனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,என்றார்.


Tags : Chief Minister ,Stalin ,Jayalalithaa ,minister ,Cellur Raju , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...