×

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் டபுள் டக்கர் பாலம்! : முதல் தளத்தில் வாகனங்கள், 2ம் தளத்தில் கண்டெய்னர்கள் செல்லுமாம்!!

சென்னை : இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் அளித்துள்ள தகவல்கள் :

*மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

*மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலை ஆக அமைக்கப்படும்.

*இந்த ஆறு வழிச்சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளது.

*இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும். அதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்படும்.

*மொத்தம் 10 வழிச்சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

*மொத்தம் 10 வழி சாலை, அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கப்படும்.

*தற்போது மாற்றி அமைக்கப்பட்ட திட்டப்படி பறக்கும் சாலையில் 7 உள்நுழைவு, 6 வெளியேறும் வழிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3 மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்.

*அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளர் தீரஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


10 ஆண்டுகளுக்கு பின் உயிர்பெற்ற திட்டப்பணி

கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்ல ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இத்திட்டத்திற்கு 2007ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2011ல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அப்போதைய அதிமுக அரசு தடை விதித்தது.ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்ற போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபின், இத்திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவித்தார். 1800 கோடி ரூபாயாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டிருந்த இத்திட்டம், ரூ. 5,900 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.


Tags : Double Tucker Bridge ,Chennai ,India , மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்