கம்பம்: சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தக்காடு பகுதிகளிலிருந்து நீர்வரத்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அருவிக்கு, தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்கள், கேரளா மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.30 வனத்துறை வசூலித்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், முன்னோர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்த மார்ச் 22 முதல், இந்தாண்டு ஜன.25 வரை சுருளி அருவிக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்தது. ஜன.26 முதல் சுருளி அருவிக்கு பொதுமக்களை அனுமதித்த வனத்துறையினர் குளிக்க மட்டும் அனுமதிக்கவில்லை.
இதனால், சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக சுருளி அருவிக்கு பொதுமக்கள் வருவதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், அருவி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதாலும், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.