சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ேநற்று அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பிறகு அவர் கூறியதாவது: செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் மநீம பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். கொரோனா காலத்தில் செவிலியர்களின் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
செவிலியர்களை பணியில் தக்கவைத்துக் கொள்வது நமது கடமை. கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.