சண்டிகர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில், தற்போது கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.இன்று மாலை அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்றாலும் இதனை பாஜக தரப்பும் கேப்டன் அமரீந்தர் சிங் தரப்பும் உறுதிப்படுத்தவில்லை.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கிய கேப்டன் அமரீந்தர் சிங் மோதலின் தொடர்ச்சியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்துவின் ஆதரவாளர் முதல்வராக பதவி ஏற்றுள்ளதால் கட்சியை விட்டு விலக கேப்டன் அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். அமரீந்தர் சிங்கை பாஜகவில் இணைத்து ஒன்றிய அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரம் பஞ்சாப் மாநிலத்தில் புதிய கட்சியை பாஜகவின் ஆசியுடன் கேப்டன் அமரீந்தர் சிங் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகிய நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங்-ன் புதிய வரவு தங்கள் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என பாஜக வட்டாரங்கள் விரும்புவதாக கூறுகின்றன.