×

புதிய அமைச்சரவையில் ஆதரவாளர்களுக்கு இடம் கிடைக்காததாள் அதிருப்தி : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகல்!!

சண்டிகர் : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்து இருப்பது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு சித்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.  அதில், சமரசம் செய்து கொள்ளும் இடத்தில் இருந்து தான் ஒரு நபரின் குணாதசியம் வீழ்ச்சி அடைய தொடங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். எனவே பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. சித்துவை சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநில தலைவராக்கிய காங்கிரஸ் தலைமை அமரீந்தர் சிங்கிற்கு அறிவிக்காமல் முதல்வரை மாற்றுவது தொடர்பாக எம்எல்ஏ கூட்டத்தையும் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த அமரீந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.இதையடுத்து சித்துவின் ஆதரவாளரான சரன்ஜித் சிங், முதல்வராக பதவி ஏற்றார். இருப்பினும் புதிய அமைச்சரவையில் சித்து சார்ந்த சமூக மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே சித்து பதவி விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சித்துவை ஒரு நிலையான மனிதர் அல்ல என்று விமர்சித்துள்ள அமரீந்தர் சிங், எல்லை மாநிலமான பஞ்சாபிற்கு சித்து ஏற்றவர் அல்ல என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Tags : Congress ,Punjab , நவ்ஜோத் சிங்
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்