சென்னை: கடந்த 2020 ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அமைப்பை பதிவு செய்தார். தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை. இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.