சென்னை : அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, கட்-அவுட், விளம்பர பதாகை, கொடிகளை வைக்க கூடாது என தமிழக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும் தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஓட்டுவது தொடர்பாக பின்வரும் வரையறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
*எந்த ஒரு அரசு வளாகத்திலும் சுவரொட்டிகளை ஓட்டுதல் அல்லது வேறு விதங்களில் உருக்குலைத்தல் அல்லது கட் - அவுட்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல்/காட்சிப்படுத்துதல் ஆகியவை அனுமதிக்கக் கூடாது.
*தமிழ்நாடு திறந்தவெளி சட்டம் 1959ல் பார்வையில் படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் அல்லது கட்டிடம் ஆகும்.
*இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும் சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஓட்டுவதோ கூடாது.
*ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டிகளை ஓட்டுவதோ கூடாது.