புதுடெல்லி: கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட வரிச் சட்டத்தால், இந்தியாவில் தொழில் செய்த இங்கிலாந்தின் கெய்ர்ன் நிறுவனம் தனது பங்குகளை கிளை நிறுவனத்திற்கு மாற்றியதன் மூலம் முதலீட்டு லாபம் அடைந்ததாக கூறி ரூ.10,000 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர, சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வரியையும், அபராதத்தையும் ஒன்றிய அரசு திருப்பி தர தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின்படி, பணத்தை வசூலிக்க வெளிநாடுகளில் இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள ஏர்இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் விட கெய்ர்ன் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே, சமீபத்தில் வரிச்சட்டம் திருத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டது. அதோடு, கெய்ர்ன் நிறுவனத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடியை தருவதாக ஒன்றிய அரச உறுதி அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட கெய்ர்ன் நிறுவனம், வெளிநாட்டு நீதிமன்றங்களில், நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரிக்கை விடுத்தது. அதன் பேரில், நியூயார்க் நீதிமன்றம் இந்திய சொத்து ஜப்தி வழக்கை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.