செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 124 பேர் போட்டியிடுகின்றனர். 154 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 751 பேர் போட்டியிடுகின்றனர். 359 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1395 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 8 ஒன்றியங்களில் 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2679 வார்டு உறுப்பினர் பதவிக்கு 8, 614 பேர் போட்டியிடுகின்றனர். 186 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 3,208 பதவிகளுக்கு 10,884 பேர் களத்தில் உள்ளனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேர் வாபஸ் பெற்ற நிலையில், 19 பேர் களத்தில் உள்ளனர். 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 157 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 51 பேர் வாபஸ் பெற்றனர். 103 பேர் போட்டியிடுகின்றனர். 39 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 79 பேர் வாபஸ் பெற்றனர். 139 பேர் களத்தில் உள்ளனர். இதில், குன்னவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக, திமுகவை சேர்ந்த சத்யா (எ) சத்யராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
342 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,527 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 188 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதில் 10 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 1,321 பேர் களத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் காட்டாங்கொளத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், இலத்தூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், புனித தோமையர் மலை ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவிருக்கிறது. 16 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 154 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 359 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், 2,679 வார்டு உறுப்பினர் என 3,208 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
நேற்று முதல் 8 ஒன்றியங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, விசிக, பாமக உள்பட பல்வேறு கட்சிகள் தனித்தும் கூட்டணியிலும் நிற்பதால், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார் தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.