திருவள்ளூர்: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்(26). ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான வானகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(26), பட்டாபிராம் சோரஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(27) ஆகியோருடன் தனது காரில் திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளார். பின்னர் அரண்வாயல் பகுதியில் பூண்டிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் கிருஷ்ணா கால்வாய் இணைப்பு பகுதியில் குளிக்க சென்றார். பின்னர் மூவரும் இணைப்பு கால்வாயில் இறங்கி குளித்தனர். அப்போது, சஞ்சீவ் ஆழமான பகுதியில் சிக்கி கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
உடனே இதுகுறித்து அங்கிருந்தவர்கள் செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்திவிட்டு வாலிபரை தேடினர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சஞ்சீவ் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.