×

திருமுல்லைவாயல் நரிக்குறவர் காலனியில் ரூ.33.5 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் ஆவடி நாசர் அர்ப்பணித்தார்

ஆவடி: நரிக்குறவர் காலனியில் ரூ.33.5 லட்சம் செலவில் சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
ஆவடி மாநகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இந்த காலனிக்கு குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. இதனால், மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி சிரமப்பட்டனர். இதற்கிடையில், திமுக ஆட்சி வந்தபிறகு, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரை சந்தித்து மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து, அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் உடனே செய்துதரும்படி உத்தரவிட்டார். இதன் பிறகு, மாநகராட்சி அதிகாரிகள் நரிக்குறவர் காலனியை ஆய்வு செய்தனர்.

பின்னர், அங்கு ரூ.20 லட்சத்தில் சாலை வசதி, ரூ.8.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு, ரூ.2 லட்சம் செலவில் மின்விளக்கு வசதி மற்றும் ரூ.3 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. இதனை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று கொண்டு வந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `கடந்த 10 ஆண்டாக, எங்கள் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிமுக ஆட்சியில் தொடர்ந்து போராடி வந்தோம்.

ஆனால், அதிகாரிகள் எவ்வித வசதிகளையும் செய்து தரவில்லை. இதனால், நாங்கள் பல்வேறு வசதி இன்றி அவதிப்பட்டு வாழ்நது வந்தோம். தற்போது, திமுக ஆட்சி வந்து சில மாதங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டனர். அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்,’ என்றனர். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சங்கர், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ், ஆவடி மாநகர செயலாளர் பேபி வி.சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Thirumullaivayal Narikkuravar Colony ,Minister ,Avadi Nasser , Thirumullaivayal Narikkuravar Colony at a cost of Rs. 33.5 lakhs: Minister Avadi Nasser Dedicated
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...