திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் திண்டுக்கலிருந்து சிறுமலை பிரிவு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதில் ரோட்டின் நடுவே சிமெண்டால் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் 2 பக்கமும் வாகனங்கள் செல்லலாம். ஆனால் இது தாழ்வாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகளுக்கு, வாகன விளக்குகளால் ரோட்டின் நடுவே உள்ள டிவைடர் தெரியவில்லை.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்துகளை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் தற்போது டிவைடரால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் குள்ளனம்பட்டி, பொன்னகரம் பகுதிகளில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே டிவைடர் பகுதியில் இரவில் வாகன வெளிச்சத்திலும் தெரியும் வண்ணம் சிகப்பு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.