×

சைசிங் மில்லில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோடு:  ஈரோட்டில் சைசிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல், துணிகள் எரிந்து நாசமாகின. ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் காமராஜர் நகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மில்லில் நூல் பண்டல்கள், துணிகள் அடுக்கி வைப்பதற்காக 6 குடோன்கள் உள்ளது. இதில் ஒரு குடோனில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க முயன்றும், அவர்களால் முடியவில்லை.  இதையடுத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில் நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். எனினும் மில்லில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேல்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


Tags : Sizing Mill , Erode, fire accident
× RELATED யானை தாக்கி விவசாயி பலி