கரூர்: பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கரூர்- சேலம் பைபாஸ் பாலத்தின் கீழ் படர்ந்து கிடக்கும் கருவேல மரத்தை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதலாவது நீண்ட தேசிய நெடுஞ்சாலையாக இந்த தேசிய சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை போடும் போது வெங்கமேடு ரயில்வே பாலம் அமைப்பதற்காக 36 பில்லர்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலம் தற்போது குளத்துபாளையம் பகுதிக்கு அண்டர் கிரவுண்ட் பாலமாக உள்ளது. இதில் ரோட்டுக்கு வடபுறம் தென்புறம் என இரண்டு பிரிவுகளாக உள்ளது. வடபுறத்தில் பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் மாணவர்கள் சிறுவர்கள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடுவதால் அந்த பகுதியில் கருவேல மரங்கள் இல்லை .இதனால் மாணவர்கள் இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர் .ஆனால் எதிர்ப்புறம் உள்ள பகுதியில் கருவேல மரங்கள் தற்போது பெரிய மரங்கள் போல் படர்ந்து விரிந்து காணப்படுகிறது.
இதை உடனே அப்புறப்படுத்தி பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் வருங்காலத்தில் பாலம் சேதம் ஏற்படுவதுடன் மது வாங்கி வந்து மதுப் பிரியர்கள் இந்த இடத்தை மினி டாஸ்மாக் பாா் போல பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்திற்கு கீழே படர்ந்து கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.