×

காஷ்மீர் பற்றி பேசிய இம்ரான்கானுக்கு நெத்தியடி; தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு அணைப்பது போல் நடிக்கிறது பாக்.: ஐநா.வில் இந்தியா பெண் பிரதிநிதி ஆவேசம்

நியூயார்க்: ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, `தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு, அதை அணைக்கும் தீயணைப்பு வீரன் போல்  பாகிஸ்தான் நடிக்கிறது,’ என்று இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகரில் ஐநா. பொதுச்சபையின் 76வது கூட்டம் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட வீடியோ பேச்சு நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது.

அதில், அவர் காஷ்மீர் விவகாரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து  உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார். இதற்கு, இதே சபையில் ஐநா.வுக்கான இந்தியாவின் முதன்மை செயலர் ஸ்நேகா துபே பதிலடி கொடுத்து பேசியதாவது: ஐநா. சபை கூட்டங்களை தவறாக பயன்படுத்தி உலக அரங்கில் இந்தியாவிற்கு எதிராக பொய்யான, திரிக்கப்பட்ட கருத்துகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பொதுமக்களை போல் சாதாரணமாக வாழ்ந்து வருவதை, உலக நாடுகளின் பார்வையில் இருந்து திசை திருப்பவே இதுபோன்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

ஐநா. பாதுகாப்பு சபையால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் அளிப்பதில் பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் தலைவர்கள் தியாகி என புகழ்கின்றனர். தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு, அதை அணைக்கும் தீயணைப்பு வீரனை போல் பாகிஸ்தான் நடித்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த கொள்கையால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி கெட்ட அமெரிக்கா
ஐநா. பொதுசபை கூட்டத்தில் ஒளிபரப்பட்ட இம்ரான்கானின் பேச்சில், `ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பது போல் அமெரிக்க, ஜரோப்பிய அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரினால் ஆப்கானிஸ்தானை விட அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்தான். அமெரிக்காவின் சர்வதேச இரட்டை நிலைப்பாடு, நன்றி கெட்ட தனத்தினால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

உடனே மூட்டை கட்டு
ஸ்நேகா துபே பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எதிர்காலத்திலும் அதுவே தொடரும். ஆனால், தீவிரவாதிகளுக்கு பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்கள் மற்றும் அடைக்கலம் அளிப்பதை பாகிஸ்தான் தனது கொள்கையாக கொண்டுள்ளது. காஷ்மீரின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், உடனடியாக அங்கிருந்து காலி செய்ய வேண்டும்,’’ என்றார்.

Tags : Nediyadi ,Imran Khan ,Kashmir ,Pak ,India ,UN , Nediyadi to Imran Khan who spoke about Kashmir; Pak: India's female envoy to UN
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...