×

கொலைக் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!!

சென்னை : தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இணை இயக்குநர் இன்று (செப். 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் செப்.23 அன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 16,370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 244 ரவுடிகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானார்கள். பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், 1,927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என, மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Djibi Silendra Babu , ரவுடிகள் ,கைது,துப்பாக்கிகள், அரிவாள்கள்
× RELATED ரோந்து பணிக்கு செல்லும்போது...