×

தமிழகம் முழுவதும் 2,512 ரவுடிகள் கைது; 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்கள் பறிமுதல்: குற்றச்செயல்களை அடியோடு ஒழிக்க காவல்துறை அதிரடி வேட்டை!!

சென்னை: தமிழகம் முழுவதும், 2 நாட்கள் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில், மண்டல ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார்(வடக்கு), சுதாகர்(மேற்கு), பாலகிருஷ்ணன்(மத்திய), அன்பு(தெற்கு) மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட மாநகர போலீஸ் கமிஷனர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரது தலைமையில் போலீசார்  2 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் செப்.23 அன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 16,370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில் 244 ரவுடிகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானார்கள். பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், 1,927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என, மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu , ரவுடிகள் ,கைது,துப்பாக்கிகள், அரிவாள்கள்
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...