×

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை: நீர்வளத்துறை டெண்டர் வெளியிட்டது

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவு அதிகரிக்கப்படுகிறது. இதற்காக, நீர்வளத்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வரும் ஜனவரி முதல் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி 23.3 அடி உயரம், 696 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. 2908 பரப்பளவு கொண்ட ஏரிக்கு ஆரணி, செய்யூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிளியாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 26 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், கள்ளாறு வழியாக சென்று பாலாற்றின் பாலவாங்குளம் சென்றடைகிறது. இந்த ஏரி நீர் 1058 ஏக்கர் வரை செல்கிறது. உபரிநீர் மதுராந்தகம் உயர்மட்ட கால்வாய் வழியாக 30 குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. கடந்த 1986ம் ஆண்டு இந்த ஏரி தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரவில்லை. இதனால், ஏரி கொள்ளளவை இழந்து, அதன் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களின் பரப்புகளும் குறைந்தன.  இதற்கிடையில், கடந்த 2015ல் வடகிழக்கு பருவ மழையால் மதுராந்தகம் ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 530 மில்லியன் கனஅடி மட்டுமே சேமிக்க முடிந்தது.

இதையொட்டி, மதுராந்தகம் ஏரியை புனரமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று கொண்ட தமிழக அரசு, கடந்த பிப்ரவரியில், மதுராந்தகம் ஏரியை தூர்வாரி புனரமைக்க ரூ.120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. நபார்டு வங்கியின் கடனுதவி மூலம் இந்த நிதி பெறப்படுகிறது. இந்த நிதியை கொண்டு மதுராந்தகம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தி 3950 மீட்டர் நீளமுடைய கரைகள் பலப்படுத்தப்படுகிறது. ஏரியை ஆழப்படுத்தும்போது, அதில் அள்ளப்படும் மண் எதிர்புறத்தில் உள்ள 1482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்தப்படுகிறது. வரத்து கால்வாய்கள் மற்றும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது.

6 கலங்கல்களின் மட்டத்தை 50 செமீ உயர்த்தி, ஏரியின் கொள்ளளவை 530 மில்லியன் கனஅடியில் இருந்து 791 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. ஏரியின் கரை அருகே 1650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், ஏரியின் கரை 31.65 மீட்டர் உயரத்தில் இருந்து 32.15 மீட்டராக உயர்த்தப்படுகிறது. ஏரியின் கொள்ளளவை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நீர் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இப்பணிக்காக நீர்வளத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 21ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி முதல் மதுராந்தகம் ஏரியின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Madurantakam Lake ,Chennai ,Water Resources Department , Chennai, Drinking Water Demand, Madurantakam Lake, Operation, Water Resources Tender
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...