×

அதிமுக தேர்தல் பிரசாரம் அடிதடியுடன் துவக்கம் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவினர் கோஷ்டிமோதல்: மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு

சாத்தூர்: தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை துவங்க, நெல்லை சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தபடியே எடப்பாடி பழனிசாமி வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, உதயகுமார் உடனிருந்தனர். அப்போது, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரான ரவிச்சந்திரனின் ஆதரவாளர் ஒருவர், ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக’’ என கோஷமிட்டார்.

இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் சாத்தூர் வெங்கடாசலபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் பின், சாத்தூர் அதிமுக நகர செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனுடன் பேசியதாகவும், அதற்காக அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் சண்முகக்கனி, அவரது தம்பி ரமேஷ் மற்றும் ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது  இளங்கோவன் புகார் அளித்துள்ளார்.  

நடுரோட்டில் காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது  நடுரோட்டில் எடப்பாடி காலில் விழுந்து ராஜேந்திரபாலாஜி வணங்கினார். மேடைகளிலும், அறைகளிலும் காலில் விழுந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தற்போது நடுரோட்டில் காலில் விழும் கலாச்சாரத்தை ஆரம்பித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

கோஷ்டிபூசலுக்கு காரணம் என்ன?
ராஜேந்திர பாலாஜியால் ஒரம் கட்டப்பட்ட சாத்தூர் எம்எல்ஏ அமமுகவில் இணைந்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தலுக்கு பிறகு ராஜேந்திரபாலாஜி தயவில் மீண்டும் அதிமுகவில் ராஜவர்மன் இணைந்தார்.இதனால் அதிருப்தியடைந்த அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.


Tags : AIADMK ,Edappadi Palanisamy , AIADMK election campaign, Edappadi Palanisamy, factional clash, former minister Rajendrapalaji
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...