கும்மிடிப்பூண்டி; திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கீழ்முதலம்பேடு, மாதர்பாக்கத்தில் நேற்று 400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமாமகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய குழு தலைவர் கேஎம்எஸ்.சிவகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமசிவாயம், மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், சாணாபுத்தூர் அம்பிகா பிர்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, சிவா, ஆரோக்கியமேரி, நேமள்ளூர் மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்கள் குழந்தைபேறு முடியும்வரை தங்களை மனரீதியாக வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசினார். பின்னர், அங்கிருந்த 400 கர்ப்பிணி பெண்களுக்கு மலர் தூவி வாழ்த்தி, அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் சத்தான உணவுபொருட்களின் கண்காட்சி நடந்தது. கர்ப்பிணிகளுக்கு இனிப்புடன் கூடிய 5 வகையான உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், லில்லி குமார், மேற்பார்வையாளர்கள் வசந்தா, அமுதா, குமுதா, காமாட்சி, ஜமுனா உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.