×

சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால்தான் இலவச சிகிச்சையா ?: ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை குறித்து விசாரிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு!!

புதுச்சேரி :புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை குறித்து விசாரிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் 2,499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் மூலைமுடுக்கிலிருந்தும் ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், இந்தியாவின் எந்த மாநிலங்களிலிருந்து வரும் வெளிநோயாளிகள் சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பித்தால் மட்டுமே இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தகுதியாக கேட்க கூடாது. எனவும் இத்திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற எம்.பி . ரவிக்குமார், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டிக்கிறேன்! ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை வழங்கப்படுமென்றும், வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா? சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி சட்சவிரோதமானதும்கூட.இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜிம்பர் மருத்துவமனை சுற்றறிக்கை குறித்து விசாரிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிம்பர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக நாளிதழ்களில் இன்று செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையே தொடர நிர்வாகத்தை கேட்டு கொள்ளுமாறும் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Governor ,Zipmer Hospital , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...