×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு குதிரை வண்டிகளில் பயணம்!!

பெங்களூரு : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு குதிரை வண்டிகளில் சென்று எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.கர்நாடக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் குதிரை வண்டிகளில் சென்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்திற்கு தலைமை ஏற்ற கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பின்பற்றி கர்நாடகாவிலும் பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் என சித்தராமையா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.


Tags : Congress ,Karnataka , பெட்ரோல், டீசல் ,சட்டப்பேரவை,காங்கிரஸ்
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி