திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகளை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவலம் நிகழுகிறது. நத்தம் அருகே சின்னமலையூர், பெரியமலையூர், வலசை, பள்ளத்துக்கால்வாய் போன்ற மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு 30 கி.மீ தூரத்தில் உள்ள நத்தம் அல்லது மதுரைக்கு செல்ல வேண்டும்.
கர்ப்பிணி பெண்களை கூட நத்தம் மருத்துவமனைக்கு டோலி கட்டித்தான் தூக்கிச்செல்லும் அவலமே நிலவுகிறது. வலசை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பாப்பாத்தி உடலை அந்த கிராம மக்கள் டோலி கட்டியே மலை பாதையில் தூக்கி சென்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியிலேயே மினி கிளினிக் வசதியாவது தேவை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ள மலை கிராம மக்கள் தற்போது திமுக ஆட்சியில் வீடு தேடி திட்டத்திலாவது கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.