நாகை : வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களை காப்பாற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நாகையில் நடந்தது.நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ளம், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்களை எவ்வாறு பாதிப்புகளில் இருந்து எளிதில் மீட்டு கொண்டுவருவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நாகை தாமரைகுளத்தில் நடந்தது.
மாவட்ட தீ அணைப்பு அலுவலர் அப்பாஸ் உத்தரவின் பேரில் மாவட்ட உதவி தீ அணைப்பு அலுவலர் கணேசன் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வீட்டில் தீடிரென தீப்பிடித்தால் அதை எவ்வாறு அணைப்பது. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தால் அதை காலதாமதம் இன்றி எவ்வாறு அகற்றுவது. பேரிடர் காலங்களில் மட்டும் இன்றி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும், வாகன விபத்தின்போது சிக்கியவர்களையும் உயிருடன் எவ்வாறு காப்பாற்றுவது. அதிகமான வெள்ள காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்பது.
ஆற்றில் வெள்ளப் பெருக்கின் போது ஒரு கரையில் உள்ளவர்களை மறுகரைக்கு கயிறு மூலம் மீட்பது உள்ளிட்ட மீட்பு பணிகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் செய்து காட்டினர். நாகை தாசில்தார் ஜெயபாலன், நிலைய தீ அணைப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.