ஆம்பூர் : ஆம்பூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த பாதையை அடைத்ததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் அதிகார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னியநாதபுரம் அருகே பெருமாள் குட்டை பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல தனியாருக்கு சொந்தமான இடத்தை வழியாக சுமார் 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தனியார் நிலத்தின் உரிமையாளர் நேற்று அந்த இடத்தில் முள்வேலி அமைத்து வழியை அடைத்ததாக கூறி அப்பகுதியினர் ஊராட்சி மன்ற அலுவகம் மற்றும் விஏஓ அலுவலகங்கள் உள்ள வளாகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு அரசு உடனடியாக உரிய வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகளிடம் கூறினர். மேலும், இந்த பிரச்னை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தங்களது வீட்டு பட்டாக்களை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வருவாய் துறையினர், இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய ஏற்பாடு செய்யப்பட்டும் என்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.