புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் வெளிப்படையாகவே மோதல்கள் வலுத்து வருகின்றன. அமரீந்தர் சிங்கின் பதவி பறிப்பது பற்றி 50 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியதால், சில தினங்களுக்கு முன் அவர் தானாகவே பதவி விலகினார். ஆனால், சித்துவின் சூழ்ச்சியால் தான் தனது முதல்வர் பதவி பறிபோனதாக அவர் நேரிடையாக குற்றம்சாட்டி வருகிறார்.நேற்று முன்தினம் அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், ‘ராகுலும், பிரியங்கா காந்தியும் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். சித்துவால் காங்கிரசுக்கு பேரழிவு ஏற்படும். அவர் பாகிஸ்தானுடன் தொடர்புள்ளவர். எனவே, அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சித்துவை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை நிறுத்துவேன். அவரை முதல்வராக்க விட மாட்டேன்,’ என்று கூறினார்.
இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா நாத் நேற்று கூறுகையில், ‘‘அமரீந்தர் சிங் போன்ற மூத்த தலைவர்கள் இப்படி பேசக்கூடாது. ராகுல், பிரியங்கா குறித்து அவர் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும். அரசியலில் கோபம், தனிமனித தாக்குதல், விரோதம், பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்க கூடாது,’’ என்றார். அவமானப்படுத்த இடம் இருக்கிறதா?சுப்ரியா ஸ்ரீநாத்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமரீந்தர் சிங் கூறுகையில், ‘அரசியலில் கோபத்துக்கு இடமில்லை என்பதை ஏற்கிறேன். ஆனால், அவமானப்படுத்துவதற்கு மட்டும் காங்கிரசில் இடம் இருக்கிறதா? மூத்த தலைவரான என்னையே இப்படி அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தும்போது, சாதாரண தொண்டர்களின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.