×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்குகளை பெறுங்கள் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருப்பத்தூர்:அதிமுகவின் சாதனைகளை கூறி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வாக்குகளை சேகரிக் வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் வரும் 6, 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் இன்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் முதன்முதலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இருக்கும் துறையில் முக்கியமான துறை உள்ளாட்சித்துறை. மக்களிடம் நேரடியாக அணுகும் துறையும், மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் துறையுமாகும். மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பது உள்ளாட்சி துறை. எனவே, இந்த உள்ளாட்சிதுறையை நிர்வகிக்க உள்ள தலைவர், கவுன்சிலர் வேட்பாளர்கள், அதிமுக ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும். மக்களால் ஆன மக்களாட்சியை நீங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஒன்றிய, கிளை கழக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கந்திலி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஜி.ரமேஷ் நன்றி கூறினார்.



Tags : Edibati Palanisami , cஎடப்பாடி பழனிசாமி
× RELATED அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்...