காந்திநகர்: குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. ஈரானில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்களில் சுமார் 3000 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 21,000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து வருவாய், புலனாய்வு துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் நடத்திய விசாரணையில் விஜயவாடாவை சேர்ந்த ஆஷிட் ரேடிங் என்ற நிறுவனத்திற்காக இந்த கண்டெய்னர்கள் வந்தது தெரியவந்தது.
சத்யநாராயணபுரத்தில் பேரளவில் இயங்கி வந்த அலுவலகத்தில் மேற்கொண்ட ஆய்வில் நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை முகவரியில் உள்ள பூர்ணா வைஷாலி என்பதும் தொலைபேசி எண் அவரது கணவர் சுதாகர் பெயரில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கொளப்பாக்கத்திற்கு வந்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் பிடிபட்ட 3,000 கிலோ போதை பொருள் குறித்த விசாரணையை அமலாக்கத்துறையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் யார் யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.