சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். தாளவாடி உபகோட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறை சந்தை முதல் தொட்டம்பாளையம் வழியாக எரங்காட்டூர் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளத்தின் குறுக்கே சாலையில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொட்டம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியாததால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு பவானிசாகர் செல்கிறது.
தொட்டம்பாளையம் கிராம மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அன்றாடம் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கட்டுமான பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.